பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான போராட்டம் தொடரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியமும் வஞ்சகத் திட்டமே. - சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென்

 பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான போராட்டம் தொடரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியமும் வஞ்சகத் திட்டமே. 

-சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென்



ஒன்றிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களை ஏமாற்றுவதற்கான மற்றுமொரு வஞ்சகத் திட்டமே என்றும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்  திட்டத்தையே மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக சிஐடியு-வின் பொதுச்செயலாளர் தபன்சென் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.


அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெறுவதற்கு முழு உரிமையும் தகுதியும் கொண்டுள்ள நிலையில் அவர்களை ஏமாற்றும் விதத்தில் 2024 ஆகஸ்ட் 24 அன்று ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.


இந்தத் திட்டத்தை சிஐடியு கண்டிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்துகிறது.


ஓய்வூதிய ஏற்பாட்டை சீர்குலைத்த வாஜ்பாய் அரசு


பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களின் பங்களிப்பு இல்லாததாகும். அத்துடன் 1972-ஆம் ஆண்டு (இப் போது 2021ஆம் ஆண்டு) மத்திய சிவில் சர்வீஸ் விதிகளின்படி உத்தரவாதம் அளிக்கப்பட்ட (Assured) ஓய்வூதியத்துடன் கூடியதாகும். ஆனால், 2004-ஆம் ஆண்டில் ஏ.பி. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 2004 ஜனவரி 1 முதல் தேர்வு  செய்யப்படும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிர்வாக உத்தரவு (Executive Order) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. 


நீண்டகாலமாக நடைபெறும் போராட்டம்


அந்த நாளிலிருந்தே இதனை ஒன்றிய அரசு ஊழியர்களும், மாநில அரசு ஊழியர்களும், மத்தியத் தொழிற் சங்கங்களும் எதிர்த்து வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 


2014 பிப்ரவரியில் ‘2013-ஆம் ஆண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம்’, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான சட்டப் பூர்வ அடிப்படையை செயல்படுத்தியது.


இந்நிலையில் தான், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதும், அதற்கு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அரசு ஊழியர் சம்மேளனங்களின் முழு ஆதரவும், மூர்க்கத்தனமான பாஜக ஆட்சியை இவ்வாறு ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை’ அறிவிப்பதற்கு இட்டுச் சென்றிருக்கிறது.


மோடி அரசு மீண்டும்  ஏமாற்று தந்திரம் 


ஆயினும் இதில் கூறப்பட்டுள்ள தொகுப்புகள் (Packages), இதுவரை ஊழியர்களிடமிருந்து பிடித்து வைத்துள்ள அவர்களின் நியாயமான தொகைகளை அவர்களுக்கு அளித்திடாமல் பறிப்பதற்கான ஏமாற்றுத்  தந்திரத்தையே பிரதிபலிக்கிறது.


பல மாநில அரசாங்கங்கள் தங்களுடைய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்குத் திரும்பி விட்டன. தங்களுடைய மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் அளித்திட்ட பங்களிப்புத் தொகைகளை மாநில அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. 


இவ்வாறு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பிவிட்ட மாநில அரசாங்கங்களுக்கு அவை கோரியபடி ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்திட்ட தொகைகளை திரும்ப  ஒப்படைத்திட மோடி அரசாங்கம் மறுத்து வருகிறது. ஆனால், இப்போது மோடி அரசாங்கம் கபடத்தனமான முயற்சியாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருகிறது.


புதிய குழப்பத்தை விளைவிக்கும் வேலை


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் குழுவின் பரிந்துரை களை பல்வேறு ஊழியர் அமைப்புகள் புறக்கணித்துவிட்டன. அந்தப் பரிந்துரைகளைப் பயன்படுத்தி இப்போது இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்னும் புதிய ஓய்வூதியத் திட்டமும், பழைய ஓய்வூதியத் திட்டமும் கலந்த ஒரு  கலவையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டிருக்கிறது.


மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றுவதுடன் தன்னுடைய கூட்டுக்களவாணி கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஓய்வூதியத் திட்டத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பில் மேலும் 4.5 விழுக்காடு கூடுதலாக அளித்து, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருகிறது. 


இதன்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2024 ஜூலை 31 அள வில் பங்குச் சந்தையில் மொத்தம் 99  லட்சத்து 77 ஆயிரத்து 165 ஊழியர் களின் மேலாண்மையின் கீழான சொத்து (AUM-Asset under Manage ment) மதிப்பு 10 லட்சத்து 33 ஆயிரத்து 850 கோடி ரூபாய்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.


பெயரைத்தான் மாற்றியுள்ளனர்


இதே போன்றதொரு திட்டத்தை ஆந்திர மாநில அரசாங்கம் அதன் மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஓய்வூதியத் திட்டம் (Guaranteed Pension Scheme) ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி பத்தாண்டு பணிமுடித்த அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் வாங்கிய கடைசி ஊதியத்தில் 50 விழுக்காடு ஓய்வூதிய மாக அளிக்கப்படும் என்று கொண்டு வந்தது. அதனை மிகச்சரியான முறையில் அம்மாநில அரசு ஊழியர்கள் நிராகரித்து விட்டார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தவிர வேறெதையும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டனர். 


இப்போது ஒன்றிய அரசாங்கம் இதே போன்று புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக வேறு பெயரில் இத்திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதனையும் மிகச் சரியாகவே ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


மேலும் மோசமான ஓய்வூதியத் திட்டம்


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடமிருந்து இதுவரை அவர் களின் ஊதியத்தில் மாதந்தோறும் 10 விழுக்காடு  பிடித்தம் செய்யப்பட்டு வந்த தொகையுடன், இனி அரசாங்கம் இப்போது அளித்திடும் 14 விழுக்காட்டுத் தொகைக்குப் பதிலாக 18.5 விழுக்காடு தொகை அளித்திடும். 


புதிய ஓய்வூதியத் திட்டத்திலாவது அரசு ஊழியரிடம் பிடித்தம் செய்து வைக்கப் பட்டுள்ள தொகையில் 60 விழுக்காட்டை அவர் பெற்றுக்கொள்வார். மீதம் உள்ள 40 விழுக்காடு தொகை முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து அவருக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும். 


ஆனால் இப்போது கொண்டுவரப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை எதுவும் அரசு ஊழியருக்கு வழங்கப்படாது. முழுத் தொகையையும் அரசாங்கமே எடுத்துக் கொள்ளும். 


இதற்குப் பதிலாக அரசு ஊழியர் பெற்று  வந்த ஊதியத்தில் 10 விழுக்காடு ஊதியம்,  அதாவது அடிப்படைச் சம்பளம் + அகவிலைப் படி, ஒவ்வொரு ஆறு மாத பணிக்காலத்திற்கும் கணக்கிட்டு அளிக்கப்படும். ஒருவர் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் அவர்  5 மாத ஊதியங்களைப் பெறுவார். பத்து ஆண்டுகள் பணிசெய்திருந்தாரானால் அவர் 2 மாத ஊதியத்தை பணிக்கொடை (Gratuity)-யுடன் கூடுதலாகப் பெறுவார்.


பாதிப்பு வழக்கம்போல  ஊழியர்களுக்கே!


2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், 25 ஆண்டுகள் பணிமுடித்து 60 வயது நிரம்பி,  இயல்பான முறையில் ஓய்வுபெறும் ஊழியர் தான் கடைசியாக வாங்கிய 12 மாத  அடிப்படை ஊதியத்தின் சராசரியில் 50 விழுக்காடு ஓய்வூதியமாகப் பெறுவார். அதற்கு முன்  ஓய்வு பெறுவோருக்கு இத்திட்டம் பொருந்தாது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பத்தாண்டு பணி முடித்தவர்களே தாங்கள் வாங்கிய கடைசி ஊதியத்தில் 50 விழுக்காடு ஊதியத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள். 20 ஆண்டுகள் பணிமுடித்து விருப்ப ஓய்வு பெறுவோருக்கும் 50 விழுக்காடு ஓய்வூதியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் 25 ஆண்டுகளுக்குக் குறைவாக பணி புரிந் தோருக்கு குறைந்த ஓய்வூதியம் கிடைக்கும். 20  ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர் அவர் வாங்கிய கடைசி 12 மாத அடிப்படை ஊதியத்தின் சராசரியில் 40 விழுக்காடு, ஓய்வூதியமாகப் பெறுவார். பத்தாண்டு பணி முடித்தவர் 20 விழுக்காடு மட்டுமே பெறுவார். விகிதாசார ஓய்வூதியத்தின்படி, 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்தோருக்கு அவர்களின் பணி விகிதாசாரத்திற்கேற்ப ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. 


பழைய ஓய்வூதியத்திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாய் + அக விலைப்படி (1.4.2025 அன்று இது 57 % கணக்கி ட்டு 5,130 ரூபாய் வரும்) சேர்க்கப்பட்டு, 1.4.2025  அன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் 14 ஆயிரத்து 130 ரூபாயாக இருக்கும். எனவே இப்போது இவர்கள் முன்மொழிந்திருக்கிற 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் என்பது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பாதிதான்.  பத்தாண்டுகளுக்குக் குறைவாக பணிபுரிந்தோர் வயது முதிர்ந்து ஓய்வு பெற்றால் அவர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும் கிடையாது.  


குடும்ப ஓய்வூதியத்திலும்  கை வைத்த மோடி அரசு


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், குடும்ப ஓய்வூதியம் என்பது ஓய்வூதி யத்தில் 60 சதவிகிதம். அதாவது 50 சதவிகி தத்தில் 60 சதவிகிதம். இதன் பொருள், ஓய்வூதி யர் வயது முதிர்ந்து (at the time of superannuation) 25 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்று அவர் கடைசியாக வாங்கும் ஊதி யத்தில் 30 சதவிகிதம். குறைந்தபட்ச ஓய்வூதி யம் 10 ஆயிரம் ரூபாய் என்பது முழுமையாகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் (supera nnuation) பெறுவது. இது குடும்ப ஓய்வூதி யத்திற்குக் கிடையாது. 


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியமானது, ஓய்வூதியர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50 சதவிகிதம் வழங்கப்படும். அதுவும், ஓய்வூதியர் ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகளுக்குள் இறந்தால் அல்லது 67 வயதுக்கு முன் இறந்தால் இந்தத் தொகை உண்டு. அதன்பின்னர் இறந்தால் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 30 சத விகிதம் குடும்ப ஓய்வூதியம் உண்டு. குறைந்த பட்ச ஓய்வூதியம் 14 ஆயிரத்து 130 ரூபாயாக இருக்கும். ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமேயாகும்.


நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் அடிப்படையில் ஓய்வூதியருக்கும் அகவிலைப்படி கொடுக்கப்பட்டு வருகிறது. 


அகவிலைப்படி  உயர்வு இருக்காது?


இதன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வூதியருக்கு 80 வயதானால், கூடுதலாக 20 சதவிகிதம், 85 வயதானால் 30 சதவிகிதம், 90 வயதானால் 40 சதவிகிதம், 95 வயதானால் 50 சதவிகிதம் மற்றும் 100 வய தானால் 100 சதவிகிதம் ஓய்வூதியம் உண்டு. அதற்கான அகவிலைப்படியும் உண்டு. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இவ்வாறு கூடுதல் ஓய்வூதியம் இல்லை. 


சம்பளக் குழு அமைக்கப்பட்டு ஊதியம் திருத்தப்படும் போதெல்லாம் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம்/குறைந்தபட்ச ஓய்வூதி யமும் திருத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், அவ்வாறு அமல்படுத்தப்படும் என்ற உறுதிமொழி எதுவும் இல்லை.     


ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறுதல் (Communation of Pension), அதாவது ஓய்வூதியத்தில் 40 சதவிகிதத்தை முன்ன தாகவே பணமாகப் பெற்றுக் கொள்ளுதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் நடைமுறை. தற்போதைய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அதுவும் கிடையாது.


பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!


இவ்வாறு எண்ணற்ற குறைபாடுகள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படுகின்றன. ஒருங்கிணைந்த ஓய்வூதி யத் திட்டத்தின் அறிவிக்கை அதிகாரபூர்வமாக வெளியாகும்போதுதான் அவற்றின் முழு விவரங்களும் வெளிச்சத்திற்கு வரும்.


எனவே, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை சிஐடியு கண்டிக்கிறது. ஊழியர்கள் எவ்விதமான பங்களிப்பும் செலுத்திடாத பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த ஒன்றிய அரசாங்கம் முன்வர வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்துகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி அரசு  ஊழியர்கள் நடத்திடும் போராட்டத்திற்கு சிஐடியு தன் முழு ஆதரவினையும் அளிக்கிறது.


இவ்வாறு தபன்சென் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தீக்கதிர்

Post a Comment

0 Comments