இந்திய தேசிய சின்னம் பற்றிய தகவல்கள்.

 தேசியக்கொடி ( அசோகச் சக்கரம் ) 



நம் பாரத மணித்திரு  நாட்டின் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் 24 ஆரங்கள் குறிக்கும் பொருள்கள் என்னென்ன?.



நமது தேசியச் சின்னத்தைப் பற்றிய சில சிந்தனைகள்.








அசோகச் சக்கரம் (Ashoka Chakra) என்பது அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் இருபத்துநான்கு ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு ஆரங்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்கத் தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை நீல நிறத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.



அசோகச் சக்கரத்தைப் போற்றும் விதமாக அசோகச் சக்கர விருது இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



அசோகச் சக்கரத்தின் 24 ஆரங்கள் குறிக்கும் பொருள்கள்:



அசோகர் பரப்பிய தர்மங்கள்  24

     (போதி சத்வ தர்மங்கள்)

1.  அஹிம்சை   -    உயிர்களுக்கு இன்னா செய்யாமை.


2.  அப்பந்தா   -    சிக்கனம்


3.  அபிச்சதி    -   பயபக்தி(பெரியோர்&ஆசிரியர்)


4.  அபசினவம்  -  மானமுடைமை


5.  உத்சஹா   -  உற்சாகம்


6.  கிருதக்ஞாதா -  செய்நன்றி அறிதல்


7.  சத்யம்  -    உள்ளத்தால் உண்மை

               சொல்லால் உண்மை

               செயலால்  உண்மையை போற்றுதல்.


8.  சமயப்பொறை -  மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்


9.  சாதுதா -   நல்லவனாயிருத்தல்


10.  சாம்யமா  -  புலனடக்கம்


11.  சாத்வம்   -  நன்மை தரும் செயல்களைச் செய்தல்


12.  சிரமசேவிதம் -  கடின உழைப்பு


13.  சுஷ்ருதா    சரீர சஹாயம்,- உடல் நோய் தீர்த்தல்


14. சௌசம்  -  உடல் தூய்மை


15.  தயை  -   இரக்ககுணம்


16.  தானம் -   வறியோர்க்கு வழங்கல்


17.  தம்மதானம்  -   தர்மத்தைப் பரபபுதல்


18.  தம்ம விஜயம்    அறத்தின் வழிபெறும் வெற்றி


19.   தர்மதாமதா   -  அறம் செய்வதில் ஆர்வம்


20.   த்ருதபக்திதா -   மாறாத அன்புள்ளம்


21.    பயம்   -    பாவம் செயவதில் அச்சம்


22.    பரிக்‌ஷா   -  தன்னம்பிககை


23.    பாவசுத்தி  -  எண்ணத்தூய்மை


24.   மார்த்தவம்   -  அருளுடைமை.



இந்தியாவின் தேசியச் சின்னம் (Emblem Of India) என்பது அரசு முத்திரைகள், ரூபாய், நாணயம் போன்றவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசின் சின்னமாக (இலச்சினை) எடுத்துக் கொள்ளப்பட்டது.கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர்,அதன்மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது.இதில் உள்ள சக்கரங்கள் தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன .



தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன .சக்கரங்களுக்கு அருகில் நான்கு பக்கமும் சிங்கம்,குதிரை,எருது,யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன.முரசின் மேல் சிங்கங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டியபடி நிற்கின்றன.இந்தச் சிற்பத்தை படைத்தவர் அசோக பேரரசர் ஆவார். இதில் உள்ள தர்ம சக்கரம் நமது தேசியக் கொடியின் மையத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர் அசோகர் ஆவார்.இவரின் அரசை மௌரிய அரசு என்று அழைத்தனர்.அசோகரின் காலம் என்பது பொது யுகத்திற்கு முன் 273 முதல் பொது யுகத்திற்கு முன் 232 வரை ஆகும்.அசோகர் 18 வயதில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.அசோகர் பொது யுகத்திற்கு முன் 261 இல் கலிங்க நாட்டின்மீது போர் தொடுத்தார்.இப்போரில் சுமார் 1,50,000 போர்வீரர்கள் மரணமடைந்தனர். இதைப்போல லட்சக்கணக்கான வீரர்கள் காயமடைந்து ஊனமானர்கள்.இதனைக் கண்டு அசோகர் மனம் வருந்தினார். ஆகவே எவ்வுயிர்க்கும் தீங்குச் செய்யக்கூடாது என்கின்ற புத்த மதத்திற்கு மாறினார். புத்த மதத்திற்கு மாறிய பின்னர் மிகச் சிறந்த அரசராக மாறி மக்களுக்கு பணிபுரிந்தார்.



அவர் சாலை ஓரங்களில் நிழல் தரும் ஆலமரம்,மாமரங்களை நட்டார்.பயணிகள் தங்குவதற்கு சத்திரங்களைக் கட்டினார்.குடி தண்ணீருக்காக கிணறுகளை வெட்டினார். சிறந்த சாலைவசதிகளை ஏற்படுத்தினார்.பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தடை செய்து பொதுச் சுகாரத்தைப் பாதுகாத்தார்.



பிற நாட்டின்மீது போர் தொடுப்பதை நிறுத்தினார்.மக்களின் வரி பணத்தைக் கொண்டு மக்களின் நலனுக்காக செலவிட்டார்.சாதி,மதவெறி போன்ற நடவடிக்கைகளை தடுத்து மக்கள் ஒற்றுமையைக் காக்க பாடுபட்டார்.மக்களுக்குச் செய்திகளை சொல்ல முதன்முதலில் கல்வெட்டுகளை பயன்படுத்தினார். புலனடக்கம், தூய எண்ணம்,நன்றியுடைமை,அறக்கொடை புரிதல்,அன்பு,தூய்மை,சத்தியம்,சேவை மனப்பான்மை,ஆதரவு தருதல்,பெரியோர்களை மதித்தல் ஆகிய நன்னெறிகளை கடைப்பிடித்ததோடு,மக்களை கடைபிடிக்க வலியுறுத்தினார்.



வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அசோகரால்பொது யுகத்திற்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் பல தூண்கள் நிறுவப்பட்டன.இவற்றில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் தூண் சாரநாத் தூண் ஆகும்.இது பொது யுகத்திற்கு முன் .250 ஆம் ஆண்டுகளில் சாரநாத்தில் உருவாக்கப்பட்டது.புத்தர் தமது முதல் போதனைகளைச் சாரநாத்தில் வெளியிட்டார்.ஆகவே அவ்விடத்தில் அசோகர் ஒரு உயரமான கல்தூணை நிறுவினார்.அதன் உச்சியில் சிங்கங்களும்,மற்ற உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கம்பீரமாக நான்கு சிங்கங்கள்,அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம் (Dharma Chakra) உள்ளது.இந்த கல்தூண் தற்போது உத்திரப்பிரதேசத்தில் வாரனாசியின் புறநகரப் பகுதியான சாரநாத்தில் உள்ள சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த தூணில் நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நிற்கின்றன.இவை அதிகாரம்,வீரம்,பெருமை,நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளைக் குறிக்கின்றன.இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுவப்படுள்ளன.இந்த பீடத்தின் கிழக்கில் யானை,மேற்கில் குதிரை,தெற்கே எருது,வடக்கில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது.மலர்ந்த தாமரை மலரும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.தூணின் மகுடமாக தர்ம சக்கரம் விளங்குகிறது.



இந்தியாவின் தேசியச் சின்னம் அசோகர் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.அசோகத் தூணின் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சின்னமே நமது நாட்டின் தேசியச் சின்னமாகும்.இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடாக ஆன தினத்தில் தேசியச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.



தீனநாத் பகர்வா என்பவர் அசோகத் தூணிலிருந்து சின்னத்தை எடுத்து நமது தேசியச் சின்னத்தை  வடிவமைத்தார்.இதில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரிகிறது.நான்காவது சிங்கம் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு உள்ளது.அசோகச் சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது.வலப் புறத்தில் எருதும்,இடதுபுறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளது.வலது,இடது கோடிகளில் தர்மசக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன.பீடத்தின் கீழிருந்து தாமரை நீக்கப்பட்டுள்ளது.



பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜெயதே” என்ற குறிக்கோள் கொண்ட வார்த்தை தேவநாகரி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஸ் ஆட்சியில் ஸ்டார் ஆப் இந்தியா (Star Of India) என்கிற சின்னம் 1857 முதல் 1947 வரை பயன்படுத்தப்பட்டது. இச்சின்னம் இன்றைக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)பயன்படுத்தி வருகிறது.



பேரரசர் அசோகர் தமது முதல் மனைவி பட்டத்தரசி விதிசா தேவியின் விருப்பத்திற்கிணங்க, கௌதம புத்தர் முதன்முதலில் அறம் போதித்ததும் பௌத்தர்களின் முதல் சங்கம் நிறுவப்பட்டதுமான இடத்தில் அசோகத்தூணை நிறுவினார். இதன் அங்கமாகப் பீடத்தின் கீழே தேவநாகரி எழுத்துருவில்: சத்யமேவ ஜெயதே (தமிழ்: வாய்மையே வெல்லும்) என்ற குறிக்கோளுரை பொறிக்கப்பட்டிருந்தது. இஃது இந்து சமய புனித நூலான வேதத்தின் முடிவுரை அங்கமாக விளங்கிய முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.



இந்தத் தேசிய இலச்சினை சனவரி 26, 1950-இல் இந்தியா, குடியரசு ஆன நாளன்று செயற்பாட்டிற்கு வந்தது.



தேசியச் சின்னத்தின் முத்திரையை மத்திய,மாநில அரசு அலுவலகங்களின் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.மத்திய அமைச்சர்கள்,ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரபூர்வமான முத்திரையாக இச்சின்னம் உள்ளது.



தேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும்,அதிகாரிகள் பயன்படுத்தும் தாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும்.மக்களவை உறுப்பினர்கள் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு நிறத்திலும் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.தேசியச் சின்னத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.இதை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.



இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு(Supreme Court of India) என்று தனிச்சின்னம் உண்டு. அதேபோல் மத்திய புலனாய்வு துறைக்கும் (CBI) தனிச்சின்னம் உண்டு.ஆனால் இவற்றிலும் ஒரு சில மாற்றங்களைத் தவிர தேசியச் சின்னமே இடம் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments