பொய்யான பாலியல் புகாரால் திசை மாறிய ஆசிரியர் வாழ்க்கை. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி.
கேரளாவில் பொய்யான பாலியல் புகாரால் ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினரைப் பிரிந்ததோடு, பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு இதனை அறிந்தமாணவி, தன்னுடைய கணவருடன் வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆசிரியர் மீது பாலியல் புகார்
கேரள மாநிலம் கோட்டயம் மதுரவேலி பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 45). ஆசிரியரான இவர் குருப்பந்தரை என்ற இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பாரா மெடிக்கல் கல்வி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் கொச்சியை சேர்ந்த ஒரு மாணவி படித்து வந்தார். அந்த மாணவி, ஜோமோன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குருப்பந்தரை போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ஜோமோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் அவரது நிறுவனம் மூடப்பட்டது. இதனால் அவரது குடும்பம் ஏழ்மையில் வாடியது. அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரம் தேடி வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.
மன்னிப்பு கேட்ட மாணவி
அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜோமோன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவரது குடும்பத்தினர் அவரை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் அவர் தனிமையில் வாடினார். இதைத் தொடர்ந்து அவர் மாற்று வேலை செய்து வாழ்க்கையை கழித்து வந்தார். cckkalviseithikal இதற்கிடையே புகார் கொடுத்த மாணவிக்கும் திருமணமானது. அவர் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் பாலியல் புகாரால் ஆசிரியர் ஜோமோன் ஏழ்மையின் எல்லைக்கு சென்று விட்டதை அறிந்தமாணவி மிகுந்த மன வேதனை அடைந்தார். இதையடுத்து அந்த மாணவி நேற்று முன்தினம் ஜோமோனின் குடும்ப தேவாலயத்திற்கு கணவருடன் சென்று திருப்பலிக்கு இடையே ஆசிரியர் ஜோமோன் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த மாணவி, மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் பொய் புகார் கூறியதாகவும், ஆசிரியர் ஜோமோன் நிரபராதி என்றும் கண்ணீர் மல்கக் கூறினார்.
வழக்கில் இருந்து விடுவிப்பு
மேலும் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜோமோன் மீது சிலரின் தூண்டுதலால் பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கேட்டார். அத்துடன் தனது புகாரையும் வாபஸ் பெற்றார். இதை தொடர்ந்து ஜோமோனை இந்த வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.
இதுகுறித்து ஆசிரியர் ஜோமோன் கூறுகையில், 'என் மீதான பாலியல் புகாரில் நான் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளேன். இதனை அறிந்ததும் என்னுடைய குடும்பத்தினரும் என்னை ஏற்றுக்கொண்டனர். இதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறு இல்லை' என்றார். பொய்யான பாலியல் புகாரால் ஆசிரியரின் திசைமாறிய வாழ்க்கையை அறிந்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு மாணவி, தன்னுடைய கணவருடன் வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
0 Comments