கல்வித்தகுதியை வரிசையாகப் பெறாத ஆசிரியரின் பணி நியமனம் செல்லாது - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.
பணி நியமனம்
கோவையில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஜோசப் இருதயராஜ் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு பள்ளிக்கல்வி இணை இயக்குநருக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
அதைநிராகரித்த இணை இயக்குனர், பத்தாம் வகுப்பு முடித்த ஜோசப் இருதயராஜ் தொலைதூரக்கல்வி மூலம் பட்டப் படிப்பையும் அதைத் தொடர்ந்து பி.எட். படிப்பையும் முடித்துள்ளார். அதன்பின்னர் 12 ஆம் வகுப்பு படித்துள்ளார். அதனால் அவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று உத்தரவிட்டார்.
அதை எதிர்த்து ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, அவரது நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க இணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
மேல்முறையீடு
தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர், கோவை மாவட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,
'ஒருவர் எத்தனை கல்வித்தகுதிகளைப் பெற்றாலும், அவை வரிசையாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பணி நியமனமோ, பதவி உயர்வோ கோர முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்' என்று உத்தர விட்டனர்.
தகுதி இல்லை
'அதேசமயம், ஜோசப் இருதயராஜுக்கு இதுவரை வழங்கப்பட்ட ஊதியத்தை அவரிடம் இருந்து திரும்ப வசூலிக்கக் கூடாது. அவரது நியமனமே சட்டப்படி செல்லாது என்பதால், ஓய்வு கால பலன்கள் பெற அவருக்குத் தகுதி இல்லை' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments